Monday, September 25, 2017

இயக்குனர் அறிவழகன், நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்

த்ரில்லர் கதைகள் மூலமாக வெற்றிகளை தந்த ஒரு இயக்குனர், புகழிலும் ரசிகர்கள் மனதிலும் உச்சியில் இருக்கும் ஒரு பெண் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்தால் அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தனது முதல் படம் முதல் தனது சமீபத்தைய ''குற்றம் 23' படம் வரை பல வெற்றிகளை தந்த இயக்குனர் அறிவழகன் , நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.



இது குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ''ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்போகும் இந்த சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நயன்தாரா போன்ற ஒரு திறமையுள்ள நட்சத்திரம் நடிக்க இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அவரது நட்சத்திர அந்தஸ்தும் நடிப்பு திறனும் இக்கதையை மேலும் சிறப்பாக்கும். படத்தின் தயார் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் மாதம் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதம் தொடக்கத்திலோ படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் ஒரு பகுதிக்கு நயன்தாராவிற்கு ஜோடியுள்ளது ஆனால் இப்படத்தின் ஹீரோ என்று யாரும் கிடையாது. நயன்தாராவின் கதாபாத்திரம் தான் ஹீரோ. இது போன்ற ஒரு கதையை இயக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு ரொம்ப காலமாகவே இருந்தது. அது இப்பொழுது நிறைவேற இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. சென்னையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது . 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுளோம்.''



இப்படத்தை 'S P சினிமாஸ்' திரு. ஷங்கர் தயாரிக்கவுள்ளார். தமனின் இசையில், KM பாஸ்கரனின் ஒளிப்பதிவில் இப்படம் உருவாகவுள்ளது.

No comments:

Post a Comment